பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அதாவுல்லாஹ் தராருக்கும் இலங்கை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்னவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் இலங்கையின் உயர் ஸ்தானிகர் ரியர் அட்மிரல் ஃப்ரெட் செனவிரத்ன, பிரதி உயர் ஸ்தானிகர் கிறிஸ்டி ரொபின், மற்றும் அமைச்சர் ஆலோசகர் (பாதுகாப்பு) பிரிகேடியர் ஜி.அ.கே.ஆர். குணரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் மேம்பாடு, விளையாட்டுத்துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு, மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள வழியாக விளையாட்டினை அங்கீகரித்து, விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
தகவல் துறைக்கான அமைச்சர், பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான உறவுகள் நம்பிக்கை, மரியாதை மற்றும் பகிரப்பட்ட விழுமியங்களின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளன என்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு, இளைஞர் தலைமுறையை நெருக்கமாக்குவதுடன், இரு நாடுகளின் மக்களிடையேயான பிணைப்பை மேலும் பலப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் விளையாட்டு இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை தகவல் துறைக்கான அமைச்சர் எடுத்துரைத்தார். விளையாட்டு அபிவிருத்தியில் அளித்த ஒத்துழைப்புக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் தலைமைக்கும் தகவல் துறை அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அமர்வு இருந்தபோதிலும், பிரதி அமைச்சரின் பாகிஸ்தான் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்பு மற்றும் நம்பிக்கைக்குரிய உறவின் தெளிவான வெளிப்பாடாகும் என்று தகவல் துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விஜயம் இருதரப்பு உறவுகளுக்கு, குறிப்பாக விளையாட்டு மற்றும் இளைஞர் துறைகளில் புதிய வழிகளை அமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கிரிக்கெட் முத்தரப்புத் தொடருக்காக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி செய்திருந்த சிறந்த ஏற்பாடுகளை இலங்கை தூதுக்குழுவினர் பாராட்டினர். முந்தைய நாள் கிரிக்கெட் முத்தரப்புக் குழுக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தின் போது பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடப்பட்டது. பாகிஸ்தான் அளித்த உயர்தர விருந்தோம்பலையும், விளையாட்டு இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் இலங்கை தூதுக்குழுவினர் பாராட்டினர். பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டிகளிலும் இலங்கை தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர்.