பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை (08) மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தானை பங்களாதேஷ் வெள்ளையடித்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் வெல்வதற்கு மிகவும் மேம்பட்ட துடுப்பாட்டப் பெறுபேறுகளைக் காண்பிக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக இப்ராஹிம் ஸட்ரான், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், செதிகுல்லாஹ் அடல், அணித்தலைவர் ஹஷ்மந்துல்லாஹ் ஷகிடி, உப அணித்தலைவர் ரஹ்மத் ஷா ஆகியோரிடமிருந்து நீண்ட இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சுப் பக்கமும் அனுபவமற்ற வேகப்பந்துவீச்சாளர்களே ஆப்கானிஸ்தானிடம் காணப்படுகின்ற நிலையில் ரஷீட் கான், மொஹமட் நபியுடன் ஏ.எம் கஸன்ஃபாரும் தாக்கத்தை செலுத்த வேண்டியுள்ளது.
பங்களாதேஷைப் பொறுத்த வரையில் சைஃப் ஹஸன், நுருல் ஹஸன் போன்றோருக்கு அணியில் தமதிடங்களை நிறுவிக் கொள்வதற்கான வாய்ப்பாக இத்தொடர் காணப்படுவதுடன், அணித்தலைவர் மெஹிடி ஹஸன் மிராஸ் சகலதுறையிலும் தொடர்ச்சியான மேம்பட்ட பெறுபேறுகளை வெளிப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இருபதுக்கு – 20 அணியில் இடம்பிடிக்க முடியும்.