: நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அமைதியின்மை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் நான்கு கைதிகளும் அடங்குவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறைச்சாலையினுள் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து நிலவிய வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சுமார் 73 பேர் காயமடைந்துள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் புஷ்பா கம்லத் தெரிவித்துள்ளார்.
நேற்று சிறைச்சாலையினுள் வெடித்த வன்முறை மோதல்களின் போது இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன், மேலும் 38 பேர் காயமடைந்திருந்த நிலையிலேயே தற்பொழுது இந்த புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று இரவு நிலைமையை அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதிலும், இன்று காலை மீண்டும் புதிய வன்முறைகள் வெடித்ததைத் தொடர்ந்து நிலைமை மேலும் மோசமடைந்தது.
இன்று காலை ஏற்பட்ட இந்த புதிய வன்முறையின் போது மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும், இரண்டு கைதிகளும் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 35 காயமடைந்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த டொக்டர் கம்லத், காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். வன்முறையைத் தொடர்ந்து நிலைமைகளை அதிகாரிகள் கையாண்டு வரும் நிலையில், காயமடைந்தவர்கள் தொடர்ந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) கலக தடுப்புப் பிரிவினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இப்பகுதிக்கு கூடுதல் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்றைய மோதல்களைத் தொடர்ந்து, சிறைச்சாலையில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் மேலதிக வன்முறைகளைத் தடுப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று காலை மூன்று கைதிகள் பல்லன்சேன சிறைச்சாலை முகாமிற்கு மாற்றப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில், இந்த அமைதியின்மைக்கான காரணங்கள் மற்றும் பின்னணிச் சூழல் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்வதற்காக விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இது தவிர, பொலிஸாரும் தனியானதொரு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் குறித்து விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையாளர்கள் தொடர்ந்து ஆதாரங்களைச் சேகரித்து வரும் நிலையில், நேற்றிரவு இச்சம்பவம் குறித்த நீதவான் விசாரணையும் நடத்தப்பட்டது.
சிறைச்சாலையினுள் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு குழுவிற்கும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மற்றொரு குழுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலே இந்த வன்முறையாக வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது