நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் பங்களிப்புடன் முறையான மின்சார முகாமைத்துவத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காகத் தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு, திங்கட்கிழமை (23) அன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் நாளாந்த மின்சார நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், மின்சாரத்தை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சவால்களை முறியடிக்க, நிறுவன ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் அதிகபட்ச பங்களிப்பை வழங்குவது அனைவரதும் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரப் பெயர்ப்பலகைகள் மற்றும் ஏனைய அலங்கார மின் கட்டமைப்புகளுக்கு அதிகளவிலான மின்சாரம் செலவிடப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் மின்சார நுகர்வில் குறிப்பிடத்தக்க அளவைச் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் நடைமுறைச் சாத்தியமான நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும், குறிப்பாக அரச சேவைக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டல்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன், உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் மின்சார நுகர்வைக் குறைப்பதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து ஆராயுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
நகர்ப்புறங்களில் அவசியமற்ற வீதி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட வலுசக்தி சேமிப்பு யோசனைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.