நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்கு, ஆசிய வளர்ச்சி வங்கி, 2,657 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதில் இருந்து மீள்வதற்காக, இந்தியா, சீனா, ஜப்பான் என பல்வேறு நாடுகளும், ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவையும் கடனுதவி வழங்கி வருகின்றன.
அந்த வகையில், இலங்கையின் நிதித் துறையை வலுப்படுத்தவும், சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்திற்காகவும் ஆசிய வளர்ச்சி வங்கி, 2,657 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கும் நிதியின் ஒரு பகுதி, கிழக்கு துறைமுக மாவட்டமான திரிகோணமலை மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள சிகிரியாவின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம் படுத்தவும், விரிவுபடுத்தவும் ஒதுக்கப்படும் என இலங்கை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.