மாணவர்கள் இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்து துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்குவதற்காக, ‘1966’ தொழிற்கல்வி சேவை துரித இலக்கம் (Vocational Education Hotline) இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரியவின் தலைமையில், நாரஹேன்பிட்டியில் உள்ள திறன்விருத்தி மையத்தில் (Nipunatha Piyasa) இந்தச் சேவை தொடங்கப்பட்டது.
இந்த ‘1966’ அவசர இலக்கத்தின் மூலம், மாணவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொழிற்கல்வி தொடர்பான தகவல்களைப் பெற முடியும்.
அத்துடன், மேலதிக சேவையை வழங்குவதற்காக, அமைச்சின் தொழில்நுட்ப அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட, தொழிற்கல்வி தொடர்பான எந்தவொரு கேள்விகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட செயலியிடம் (Chatbot) பயனர்கள் உரையாடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் அடிப்படைத் தொழிற்கல்வி கற்கத் தொடங்கும் நிலையில், மாறிவரும் கல்விச் சீர்திருத்தச் செயல்முறையுடன் நவீன தொழிநுட்பத்தை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் நாளைய பணியிடத்தில் வெற்றிகரமாக நுழைவதற்குத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை வளர்ப்பதற்காக, தொழிற்கல்வி கட்டமைப்பானது மாற்றியமைக்கப்பட்டு சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.