ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபரும், ஜனநாயக போராளியுமான ஜிம்மி லாய், 78, சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட முக்கிய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங், நம் அண்டை நாடான சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக உள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்த நாடு, 1997ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சி கேட்டு, ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஹாங்காங்கில், ‘ஆப்பிள் டெய்லி’ என்ற பிரபல நாளிதழை நடத்தி வந்தவர் ஜிம்மி லாய். ஜனநாயகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த ஜிம்மி லாய், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்.
மற்ற நாடுகள் சீனாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் துாண்டும் சூழ்ச்சிகளுக்கு காரணமாக இருந்தார் என்பது லாய் மீதான குற்றச்சாட்டு. குறிப்பாக அமெரிக்காவிடம் சீனா மற்றும் ஹாங்காங்கிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கோரிக்கை வைத்ததாகக் கூறப்பட்டது.
மேலும் அரசு மீது அதிர ு ப்தியை ஏற்படுத்தும், 161 கட்டுரைகளை அவர் எழுதியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஹாங்காங்கில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஜனநாயக ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது.
இதையடுத்து 2020-ல் அங்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு, ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு ஹாங்காங்கின் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்று விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், வெளிநாட்டு கூட்டு சதி மற்றும் தேசத் துரோக வழக்கில், ஜிம்மி லாய் குற்றவாளி என ஹாங்காங் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஜிம்மி லாய் ஏற்கனவே ஐந்து ஆண்டுகளாக தனிமைச் சிறையில் உள்ளார். அவருக்கு, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்தத் தீர்ப்பை கண்டித்துள்ளன.