திருகோணமலை கோமரங்கடவல -அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (22.1.2026) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் குறித்த சிறுவர்களை அழைத்துச் சென்று கசிப்பு அருந்த கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோமரங்கடவல பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களை கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் மேலதிக சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எட்டாம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
போதையற்ற நாடாக முப்படையினர் செயற்பட்டு வரும் நிலையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் இப்படியான ஒரு கீழ்த்தரமான வேலையை செய்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சிவில் சமூக அமைப்பின் பிரதானியொருவர் எமது ஊடகப் பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.