நாட்டில் ஏற்பட்ட தித்வா புயல் காரணமாக நுவரெலியா மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டது. இதில் வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மொத்தமாக நான்கு வாகனங்கள் புதைந்தன அவற்றில் சில வாகனங்களை இன்றுவரை மீட்டெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றன.
இதே மண்சரிவில் புதையுண்டு எட்டு பேர் உயிரிழந்தனர் இவர்களின் உடல்களை நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் சில நாட்களுக்குப் பிறகே மீட்கப்பட்டன காரணம் மீட்பு பணியின் போது இடையூறு ஏற்படும் வகையில், அடிக்கடி மழையும் பெய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் – நவம்பர் 27ஆம் திகதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானது மாலையில் திடீரென சேறும் சகதியும் கலந்த மண், கற்கள், ராட்சர பாறைகள் உருண்டு வந்தது.
வீடுகள் முன் மற்றும் வீதியோரங்களில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ,வேன்,லொறி மற்றும் முச்சக்கரவண்டி என நான்கு வாகனங்களும் வீட்டு உபயோக பொருட்களும் அடித்து செல்லப்பட்டு, மண்ணில் புதைந்தன.
மேலும் 4 வீடுகள் மண் சரிவில் முழுமையாக சிக்கிக் கொண்டது மேலும் சில வீடுகள் மீது பாறைகளும் விழுந்துள்ளது இன்றுவரை அவற்றை அகற்ற முடியாத நிலையில் உள்ளோம் என தெரிவித்தனர்.
இதனால் இன்றுவரை மீட்க முடியாத வாகனங்களில் மேல் பாரிய கற்பாறைகள் காணப்படுவதால் அவற்றை சிறிது சிறிதாக அப்புறப்படுத்தி வாகனத்தில் உள்ள சேதமான பாகங்களை மாத்திரம் மீட்டெடுக்க கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்தனர்.
மண்சரிவின் போது உடனடியாக இடம்பெயர்ந்து மக்கள் பாதினாவெல முஸ்லிம் வித்தியாலயம், ரேந்தபொல தமிழ் வித்தியாலயம், பள்ளிவாசல் மற்றும் அம்பேவல பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டனர்.
இருந்தும் அவர்களுக்குத் டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வீடுகளை மறுவாழ்வு செய்வதற்கும் அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தற்சமயம் சீரான காலநிலை காணப்படுகின்றன இருந்தும் சமீபத்திய மோசமான மழைப்பொழிவு காரணமாக ஏற்கனவே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள பல பகுதிகள் உள்ளன அவற்றில் அபாயகரமான வெடிப்புக்களும் உள்ளன இனி வரும் நாட்களில் சிறிதளவு மழை பெய்தாலும், அந்தப் பகுதிகள் ஏதோ ஒரு வகையில் சுறுசுறுப்பாக மாறி மீண்டும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் சுற்றியுள்ள சூழல் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு பொதுமக்களை வலியுறுத்தி உள்ளது.