கொழும்பில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாரிய தூண் ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் ஐந்து வீடுகள் உடைந்தமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியிலுள்ள ஐந்து வீடுகளே இவ்வாறு நேற்றிரவு உடைந்து வீழ்ந்துள்ளன.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக அந்தப் பகுதியிலுள்ள மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இதன் காரணமாக எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்டு கொழும்பு மாநகரசபை மேயர் விராய் கெலி பல்சதார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் கொழும்பு மாநகரசபை மேயர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உடனடி உதவிகள், நீண்டகால பாதுகாப்பு வீட்டு திட்டங்கள் போன்ற விடயங்களில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகர சபை உறுப்பினர் ஆனந்தக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான தேவையான நலத்திட்டங்கள் மற்றும் வீட்டு வசதிகள் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கனமழை காரணமாக மண் சரிவு மற்றும் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.