தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற விபத்து தொடர்பாக மஹேந்திரா பொளேரோ கெப் ரக வாகன சாரதியை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தலவாக்கலை நகர மத்தியில் தீபாவளி தினத்தன்று அதிகாலை பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது மஹேந்திரா பொளேரோ கெப் ரக வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த (31) உயிரிழந்தார்.
சென்ட்கிளையார் புகையிரத விடுதியை தற்காலிக வசிப்பிடமாக கொண்ட 28 வயதுடைய செல்வநாதன் புஸ்பகுமார் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று லொறியின் சாரதி தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
குறித்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அவரின் வீட்டுக்கு கொண்டு வரும் வழியில் பிரதான வீதியை மறித்து அணிதிரண்ட மக்கள் குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சம்பந்தப்பட்ட சாரதிக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலவாக்கலை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உறுதியளித்திருந்ததுடன் அதற்கிணங்க குறித்த சந்தேக நபர் திங்கட்கிழமை (3) அன்று தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.