மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கிறார்கள் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் ஊடக பேச்சாளர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் 12வது பேச்சாளர் மாநாடு நேற்று(17.02.2026) சாய்ந்தமருது கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2017 ஆண்டு மாகாண சபை தேர்தல் நடைபெற கூடாது என்பது தொடர்பில் சதி செய்யப்பட்டது. குறிப்பிட்ட சிலரின் சதி திட்டங்களின் பிரதி பலனை தான் இந் நாடு தற்போது அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது. அப்போது சிலர் மாகாண சபையை ஒழிப்பதற்கான சதி என்று கூறினார்கள்.
தற்போது கூட அந்த மாகாண சபை தேர்தலை நடத்துவதற்குரிய சட்டப்பிரச்சினை இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாகவே உணர்கின்றோம். மாகாண திருத்த சட்டத்தை இரவோடு இரவாக கொண்டு வந்த ரணில் மற்றும் ஹக்கீமும் றிசாட்டும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
அத்துடன், பகிரங்கமாகவே சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அண்மையில் கூட நிசாம் காரியப்பரும் மாகாண சபையை ஒழிப்பதற்கு எமது கட்சியும் ஒரு காரணம் தான் என ஏற்றுக்கொண்டிருந்தார். இவற்றை பார்க்கும் பொழுது வேண்டுமென்றே இந்த தேர்தலை நடத்த விடவில்லை என்பது எண்ணத் தோன்றுகின்றது.
இதை விட ஆட்சியில் இருக்கும் சட்டத்தரணிகளுக்கு கூட இந்த சட்டங்கள் தெரியவில்லையா? என்பதை நாங்கள் கேள்வியாக கேட்க விரும்புகின்றோம். எங்களை பொறுத்தவரை மாகாண சபை தேர்தல் சரியான முறைப்படி நடத்தப்பட வேண்டும்.
அத்துடன், மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தான் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல்கள் ஏற்பட்டிருந்தன.
ஆனால் விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இன்று ஒப்பாரி வைக்கின்றது.
இது அவர்களது முரண்பாடான செயற்பாடாகவே இருக்கின்றது. உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரபாகரனை பின்பற்றுவார்களாயின் மாகாண சபை தேர்தல் வேண்டாம் என்றே கூறவேண்டும்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கின்றார்கள். சிங்கள அரசாங்கத்தின் தேர்தல் முறையினை ஏற்றுக்கொள்கின்றார்கள்.
அரசாங்கத்திற்கு சில அழுத்தங்களை வேண்டும் என கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கின்றார்கள் என்பது தான் உண்மையாகும். எனவே, தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் 12வது பேராளர் மாநாடு கட்சியின் தலைவர் முஸ்னத் முபாறக் தலைமையில் நடை பெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானியர்களுக்கான விசா கட்டுப்பாட்டை தளர்த்த பணிப்பு
பாகிஸ்தானின் மத்திய உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருமான மோசின் நக்வி உடனான சந்திப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தானை அனைத்து “எதிர்மறை” விசா பட்டியல்களிலிருந்தும் உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜைகளுக்கான பயண வசதிகளை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
இச்சந்திப்பின் போது, பாகிஸ்தானியர்கள் இலங்கை விசாவைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களை நக்வி சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாகிஸ்தானை கட்டுப்பாடுகள் உள்ள விசா பிரிவுகளிலிருந்து நீக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த முடிவு சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பயணிகளுக்குப் பெரும் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி மற்றும் வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுக்கான அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சவாலான காலப்பகுதிகளில் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
மேலும், இலங்கைப் பிரதமர் விரைவில் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் அவர் அறிவித்தார்.