தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (20) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், உலகச் சந்தையில் நிலக்கரி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சாதாரண காலங்களில் மேற்கொள்ளப்படும் கொள்வனவுகளுக்கான விலைகளை விட தற்போது உலகச் சந்தையில் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற்கொண்டே எதிர்காலத் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,
“எமது பிரதான இலக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதாகும். அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் பின்பற்றி வருகிறோம். ஒவ்வொரு மாதமும் மின்சார நுகர்வில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில மாதங்களில் மின்சார நுகர்வு அதிகமாக இருக்கும். நிலக்கரியின் தரம் தொடர்பான சில அறிக்கைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, அவை குறித்து நாம் ஆராய்வோம். எவ்வாறாயினும், எமது எதிர்பார்ப்பு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாகும். உலகச் சந்தையில் நிலக்கரி முதல் அனைத்தும் விலை அதிகரித்துள்ளன. மறுபுறம், இவ்வாறானதொரு சூழலில் நாம் கோரும் டெண்டர்களில் சாதாரண காலங்களில் கிடைக்கும் விலைகள் கிடைப்பதில்லை. எனவே, எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும் உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டே தீர்மானிக்க வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.