இணையம் வழியாக அறிமுகமான பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விட்பி நகரைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறன்ரோ பொலிஸ் சேவையின் தகவல்படி, குற்றம் சுமத்தப்பட்ட நபர் 29 வயதுடைய பெண் ஒருவரை டேட்டிங் தளம் ஒன்றின் ஊடாக அறிமுகம் செய்துள்ளார். பின்னர் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி ரொறன்ரோவின் லோரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் (Lawrence Avenue East) மற்றும் ஹோம்ஸ்டெட் வீதி (Homestead Road) சந்திப்பிற்கு அருகில் அவர்கள் நேரில் சந்தித்துள்ளனர்.
அந்தச் சந்திப்பின் போது, குறித்த நபர் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அதன் பின்னர் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜோன் ஹெய்லொக் (John Haylock) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் இரண்டு குற்றவியல் துன்புறுத்தல் (Criminal harassment) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
விசாரணையாளர்களின் தகவல்படி, குறித்த நபர் பேஸ்புக் (Facebook), பேஸ்புக் டேட்டிங் (Facebook Dating), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் எக்ஸ் (X) உள்ளிட்ட பல்வேறு தளங்களைப் பயன்படுத்திப் பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனால் மேலதிகமாக யாராவது பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளதுடன், இது குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.