ஒன்டாரியோ மாகாண காவல்துறை அதிகாரிகள் ஒன்டாரியோ மாநிலத்தின் ஓவென் சவுண்டிற்கு வடக்கில் உள்ள பல்மி பீச் அருகே பனியின் மீது பலர் சிக்கியிருப்பதாக அறிந்த தகவலையடுத்து அவர்களை மீட்டதாக தெரிவித்துள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜோர்ஜியன் வளைகுடாவில் கரையிலிருந்து பிரிந்த பனித்தட்டில் நின்றிருந்த 23 பேரை மீட்டதாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையால் பின்னர் வெளியிடப்பட்ட செய்தியில் பலத்த காற்றும் நீரோட்டமும் காரணமாக அந்த பனித்தட்டு கரையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நகர்த்தப்பட்டதாக OPP கூறியது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், அந்த பனித்தட்டு பல பகுதிகளாக உடைந்ததால் சிலர் மிகுந்த குளிரான நீரில் பகுதியளவில் மூழ்கியதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
பிற்பகல் சுமார் 2:30 மணிக்குள் அனைவரும் பாதுகாப்பாக ஹெலிகாப்டர்களின் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் உடல் வெப்பம் குறைவது (Hypothermia) உள்ளிட்ட சிறிய காயங்கள் சிலருக்கு ஏற்பட்டதாகவும் காவல்துறை கூறியிருந்தது என்பதோடு மீட்கப்பட்ட அனைவரும் முழுமையாக குணமடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.