அணுகுண்டு வெடிப்புகளைத் தாங்கும் திறன் கொண்ட, 78,000 டன் எடையுள்ள பிரம்மாண்டமான செயற்கைத் தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது.
அதிகாரப்பூர்வமாக ‘ஆழ்கடல் அனைத்து காலநிலை வசிப்பிட மிதக்கும் ஆராய்ச்சிக் கூடம்’ (Deep-Sea All-Weather Resident Floating Research Facility) என்று அழைக்கப்படும் இந்த மிதக்கும் அமைப்பு, சீனாவின் “தொலைதூரக் கடலுக்கான நகரும் தீவு” என்று வர்ணிக்கப்படுகிறது.
இந்த மிதக்கும் தீவு, சீனாவின் ஃபுஜியான் (Fujian) விமானம் தாங்கி கப்பலின் அளவுக்கு விசாலமானதும், அரை நீர்மூழ்கிக் கட்டமைப்புடன் கூடியதுமாகும்.
இதன் நீளம் 138 மீற்றர் மற்றும் அகலம் 85 மீற்றர் ஆகும். இதன் பிரதான தளம் நீரின் மேற்பரப்பில் இருந்து 45 மீற்றர் உயரத்தில் உள்ளது. இது 6 முதல் 9 மீற்றர் உயரமுள்ள அலைகள் மற்றும் மிக சக்திவாய்ந்த வகை 17 சூறாவளிகளை கூடத் தாங்கும் திறன் கொண்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வெளிப்புற உதவிகளை பெறாமல், 4 மாதங்கள் வரை 238 பணியாளர்களை தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதிக்கு தலைமை தாங்கும் கல்வியாளர் லின் ஜோங்சின் (Lin Zhongqin), “நாங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை முடித்து, 2028 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டிற்குக் கொண்டு வரத் தீவிரமாகச் செயல்படுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானிகள் இந்த அமைப்பில் “மெட்டாமீட்டீரியல்” செண்ட்விச் படலங்களை பயன்படுத்துகிறார்கள். இவை “பேரழிவு தரும் அதிர்ச்சிகளை மென்மையான அழுத்தங்களாக” மாற்றும் திறன் கொண்டவை என சவுத் சீனா மோர்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
சீனா இதனை விஞ்ஞான உள்கட்டமைப்பு என்று விபரித்தாலும், இதன் வடிவமைப்பு அணு ஆயுதத் தாக்குதலின் மிக மோசமான சூழ்நிலையையும் இந்த அமைப்பினால் சமாளிக்க முடியும் எனவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.