சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் நகரில் உள்ள “பல்சமய இல்லம்” (Haus der Religionen) உலகின் பல்வேறு மதங்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கும் புதுமையான கட்டிடமாக கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக பண்பாட்டு இணக்கத்திற்கும் மதங்களிடைய உரையாடலுக்கும் முக்கிய தளமாக திகழ்கின்றது.
பேர்ன் நகரின் வடபகுதியிலிருந்து தெற்கே செல்லும் பயணிகளுக்குக் கண்ணில் பட்டுவிடக்கூடிய இந்த கட்டிடம், ஐரோப்பாவில் கூட அரிதாகக் காணப்படும் தனித்துவத்தை உடையது.
இந்த ஒரே கட்டிடத்தில் கருவறையில் தமிழ் வழிபாடு நடைபெறும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில், இசுலாமியப் பள்ளிவாசல், தேவாலயம், குர்திஷ்-அலெவிட் நடுவம், ஆறு வகையான புத்தமத வழிகளை இணைக்கும் நடுவம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.
அதோடு யூத மதம், சிக் மதம் மற்றும் பஹாய் மதத்திற்கான சாளரங்களும் இங்கு உள்ளன. மக்கள் சந்திப்பு, உரையாடல் மற்றும் திருவிழாக்களுக்கு பொதுத் திடலும் உண்டு.
“பல்சமய இரவு” போன்ற நிகழ்வுகளின் போது இரண்டு முதல் மூன்று ஆயிரம் பேர் வரை இங்கு கூடுகின்றனர். இப் பல்சமய இல்லம் 14 டிசம்பர் 2014 அன்று திறந்து வைக்கப்பட்டது. அப்போது ஊடகங்கள் இதை “பேர்ன் நகரத்தின் புதுமை”, “புதிய காலக்கட்டத்தின் தொடக்கம்”, “மத அரசியலில் ஒரு புரட்சி” என உரைத்திருந்தன.
இப் பல்சய இல்லத்தின் உருவாக்கத்திற்கு பல முன்னோடியான முயற்சிகள் காரணமாகின. 1740 முதல் பேர்னில் இருந்த ஹேறென்கூற்ரெர் (Herrnhuter Gemeinde)“ சகோதரர் சமூகத்தினர் 1998 ஆம் ஆண்டு புதிய சமூகப் பணிக்கான நோக்கத்தைக் குறித்து சிந்தித்தனர்.
மதங்களுக்கு இடையிலான உரையாடல், குடியேற்றம் மற்றும் அமைதி பணிகள் முக்கிய கருப்பொருள்களாகத் தோன்றின.
17ஆம் நூற்றாண்டு செக் சிந்தனையாளர் யோஹான் அமோஸ் கோமேனியஸின் “அமைதிக்கான பணிகள்” என்ற கருத்து இங்கு வழிகாட்டியாக இருந்தது. அதே சமயம் 1990களின் தொடக்கத்தில் நடைபெற்ற வளைகுடா போர்களுக்குப் பிறகு பேர்னில் “மதங்களின் வட்டமேசை” உருவானது. இது பல மதத்தினரும் ஒன்றாக சந்தித்து உரையாட ஒரு தளமாக இருந்தது.
மேலும், பேர்ன் நகரத் திட்டமிடல் அலுவலகத்தின் ஆய்வில், குடியேற்ற மக்களால் வளர்ந்த ப்யூம்ப்லிஸ் பகுதியின் சமூக மாற்றங்கள் கவனிக்கப்பட்டன.
கலைக்கல்லூரி விரிவுரையாளர் கிறிஸ்தியன் ஜாக்குவெட், “பல்லினப் பல்பண்பாடுகளும் மதங்களும் ஒன்றிணையும் ஒரு இல்லம்” அந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை உயர்த்தும் என பரிந்துரைத்தார். இந்த மூன்று முயற்சிகளும் 2000ஆம் ஆண்டு நவம்பரில் ஒன்றிணைந்து “பல்சமய இல்லம்” என்ற யோசனையை முன்னெடுக்கத் தொடங்கின.
2002ஆம் ஆண்டு “Haus der Religionen – Dialog der Kulturen ” என்ற பல்சமய இல்லம் உருவானது. எட்டு உலக மதங்களைச் சேர்ந்தவர்கள் இதில் செயல்பட்டனர்.
அவர்கள் பல்வேறு பண்பாட்டு மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இங்கு சை ஆயுர்வேத உணவகம் அமைந்துள்ளது. இதனை பல்சமய இல்லத்திற்காக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்களில் ஒருவரான சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் நடாத்தி வருகின்றார்.
இன்றைய உலகில் எந்த நகரமும் தனித்தனியாக வாழ முடியாது. பண்பாட்டு, பமய பல்வகைமை பாடசாலைகள், மருத்துவமனைகள், இறுதி சடங்கு நடுவங்கள் என அனைத்து துறைகளிலும் உரையாடல் தேவையாக அமைகின்றது.