சிறைச்சாலைகளுக்குள் கைதிகள் படுகொலை செய்யப்படும் கொடூரச் சம்பவங்கள், வரலாற்று ரீதியாக வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி படுகொலை செய்யப்பட்ட காலம் தொட்டே இன்று வரை தொடர் கதையாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சில் புதன்கிழமை (08) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறைகைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு, ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
அவர் ஊடகங்களுக்கு மேலும் விபரித்ததாவது,
விசேடமாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகள் தற்போது எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள், அவர்கள் தொடர்பான விபரங்கள் என்ன என்பது குறித்து நாம் அதிகாரிகளிடம் கோரியிருந்தோம். ஆனால், இன்றைய கலந்துரையாடலின் போது அந்த கைதிகள் தொடர்பான சரியான விபரங்கள் அதிகாரிகளிடம் இல்லை என்பதும், கைதிகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் விபரக் கோப்புகள் யாவும் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுவதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விபரங்களை அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவில்லை. அரசாங்கம் இந்த விபரங்களை வெளிப்படையாக அறிவிக்காத காரணத்தினாலேயே நாடு முழுவதும் ஒரு தேவையற்ற பயமும், பதற்றமும் உருவாகியுள்ளது.