யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்த கைதியொருவர் வைத்தியசாலையில் கோமா நிலையில் உள்ள சம்பவம் குறித்து சிறைச்சாலை வட்டாரம் தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது.
கைதி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரி ஊடக சந்திப்பொன்றை நடத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த கைதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் கீழே விழுந்து தலையில் காயப்பட்டதற்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முதல் கட்ட விசாரணையின் போது யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது.
அத்துடன், குறித்த கைதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்படும் போதே உடல் சோர்வுற்று இருந்ததாகவும், இந்நிலையில் கீழே விழுந்ததாகவும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வைத்தியர் சிகிச்சை அளித்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு ஒரு நாள் சிகிச்சைக்கு பின்னர் மீள சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மீண்டும் உடல் இயலாமை ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் – என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலக இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
இதேவேளை, சிறைச்சாலையில் தாக்கப்பட்டு தனது சகோதரன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்டவரின் தங்கை சிவராமலிங்கம் சிந்து வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.