கிண்ணியா பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பை தீவிரப்படுத்துவது குறித்து ஆராயும் மத்திய குழுவின் கூட்டம் நேற்று (09) காலை 9.00 மணிக்கு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை மண்டபத்தில் நடைபெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையின் கீழ் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிண்ணியா நகர சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் முக்கிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றை பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சுற்றி வளைப்பு செய்து, விற்பனையில் ஈடுபடுபவர்களைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தல்.
போதைக்கு அடிமையானவர்களை இனம் கண்டு, அவர்களுக்குப் பொருத்தமான தொழில்களை வழங்குதல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற தீர்மானங்கள் இதன் போது மேற்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தின் முடிவில், போதை ஒழிப்பு மத்திய குழுவின் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 35 புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்தக் குழுவின் மூலம் கிண்ணியா பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்கவும், பாதிக்கப்பட்டவர்களைச் சமூகத்துடன் மீண்டும் இணைக்கவும் புதிய உத்வேகத்துடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இது சமூகப் பொறுப்பு என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.