கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி கணினி ஊடுருவிகளிடம் சிக்கியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நிதியமைச்சு மிக விரைவில் தெளிவான விளக்கத்தை அளிக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் இந்தச் சம்பவம் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் அமைச்சரவைக்கு அறிக்கையிடப்படவில்லை என்றும் இது தொடர்பான உண்மைகளை நிதியமைச்சு விரைவில் விளக்கும் என்றும் கூறினார்.
விசாரணைக் குழு: இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை ஆய்வு செய்த பின்னர் இது குறித்து விசாரணை நடத்த விசேட நாடாளுமன்றக் குழுவை நியமிப்பதா இல்லையா என்பது குறித்து சபாநாயகர் தீர்மானிப்பார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரின் பதில்: “நிதியமைச்சு இது தொடர்பாக விளக்கமளிக்கும். இப்போதைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அனுப்பிய கடிதத்தில் உள்ள விபரங்கள் மட்டுமே எமக்குத் தெரியும். மேலதிக விபரங்கள் மிக விரைவில் வெளியிடப்படும்” என அமைச்சர் பதிலளித்தார்.
பின்னணி:
ஆஸ்திரியக் கடனுக்கான ஒரு தவணையாகச் செலுத்தப்பட்ட இந்த நிதிஇ வெளிநாட்டு வங்கிக்குச் செல்லாமல் ஹேக்கர்களின் கைக்குச் சென்றிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.