அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்பு எந்தவித தயார் படுத்தலும் இல்லாமலே செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 6ஆம் தரத்துக்கான பாடத்தொகுப்பு மூன்று மாதங்களுக்கே தயாரித்திருக்கிறது. அரசாங்கம் இதனை வாபஸ் பெற்றுக்கொண்டிருக்காவிட்டால், மாணவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சங்கம் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (15) நடத்திய ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் தரம் 6ஆம் வகுப்புக்கான புதிய கல்வி மறுசீரமைப்பை வாபஸ்பெற்றுக்கொண்டுள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறாோம். ஆனால் வாபஸ் பெற்றுக்கொள்ளாமல் முன்னெடுத்துச் சென்றிருக்கலாம் என சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு முடியாது. ஏனெனில் 1ஆம் மற்றும் 6ஆம் தர மாணவர்களுக்கு தயாரித்திருக்கும் பாடத்தொகுப்பு (மொடியூல்) முதலாம் தவணைக்கு மாத்திரமே தயாரித்திருக்கிறது.அடுத்துவரும் இரண்டாம் மற்றும் 3ஆம் தவணைகளுக்கு தேவையான பாடத்தொகுப்புகள் இதுவரை தயாரிக்கப்படவும் இல்லை அச்சிடப்படவும் இல்லை.
அதேபோன்று இந்த பாடத்தொகுப்பை கொண்டு செல்வதற்கு ஆசிரியர்களை பயிற்றுவித்திருப்பதும் 3 மாதங்களுக்காகும். முதலாம் தவணைக்கு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறது என்ற எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் அரசாங்கம் எந்த தயார் படுத்தலும் இல்லாமலே இந்த பாடத்தொகுப்பு
முறையை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறது. அரசாங்கம் திட்டமிட்ட பிரகாரம் 6ஆம் வகுப்புக்கு இது ஆரம்பிக்கப்பட்டிருந்தால், மாணவர்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிட்டிருக்கும்.
அத்துடன் கல்வி மறுசீரமைப்பு என அரசாங்கம் தெரிவித்தாலும் இது கல்வி மறுசீரமைப்பு அல்ல. பாடத்திட்ட மறுசீரமைப்பாகும். பாடத்திட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளும்போது ஆரம்பமாக அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தி, மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் என்ன செய்யப்போகிறோம் என தெரியாமலே இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதனால் அடுத்த வருடம் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தால், தற்போதே அது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேநேரம் அரசாங்கம் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை 5 தூண்களை அடிப்படையாகக்கொண்டே மேற்கொள்வதாக தெரிவித்திருந்தது. அதில் பிரதானமான விடயம்தான், தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதாகும். ஆனால் இந்த நடவடிக்கையில் இதுவரை அடிப்படை வசதிகள் பூரணப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
வருட நடுப்பகுதியாகும் போதே அடிப்படை வசதிகள் பூரணப்படுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார். அவ்வாறு இருக்கையில் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்?
குறிப்பாக இந்த புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதற்கு கணனி வசதி இருக்கவேண்டும். ஸ்மாட் வகுப்பறை இருக்கவேண்டும். அதிகமான பாடசாலைகளில் அந்த வசதி இல்லை. அதனால் இந்த அடிப்படை வசதிகளை தற்போது விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாங்கம் தேசிய கல்வி நிறுவனத்தின் ஒருசிலரை நியமித்துக்கொண்டே இதனை மேற்கொண்டுள்ளனர். அதனால் இந்த நடவடிக்கையை வெற்றிபெறப்போவதில்லை என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வந்தோம். ஆனால் அரசாங்கம் பிடிவாதத்துடன் செயற்பட்டு வந்ததால், இன்று அதனை வாபஸ் பெற வேண்டி ஏற்பட்டுள்ளது என்றார்.