கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியர் போயலியேவ் (Pierre Poilievre), தனது கட்சியைச் சேர்ந்த நான்காவது நாடாளுமன்ற உறுப்பினர் லிபரல் கட்சிக்குத் தாவியதையடுத்து, தனது தலைமைத்துவம் குறித்த கேள்விகளுக்கு ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
தென்மேற்கு ஒன்டாரியோவின் (Sarnia-Lambton) நாடாளுமன்ற உறுப்பினர் மெர்லின் கிளாடு (Marilyn Gladu), கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலகி பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) தலைமையிலான லிபரல் கட்சியில் இணைவதாக அறிவித்தார். நவம்பர் மாதத்திலிருந்து கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலகும் நான்காவது உறுப்பினர் இவராவார்.
தனது தலைமைத்துவம் குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த போயலியேவ், “எனது அதிகாரம் கையாடல் ஒப்பந்தங்களில் இருந்து வரவில்லை, அது கனடிய மக்களிடமிருந்து வந்தது” என்று குறிப்பிட்டார். கடந்த தேர்தலில் 8.3 மில்லியன் கனடியர்கள் தமக்கு வாக்களித்ததையும், சமீபத்திய கட்சி மாநாட்டில் 87 சதவீத ஆதரவைப் பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சியின் கொள்கைகளைக் கைவிட்டு வேறு கட்சிக்கு மாறும் உறுப்பினர்களைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு (Recall Petitions), அந்தத் தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
லிபரல் கட்சி மேலும் 9 கன்சர்வேடிவ் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் கட்சித் தாவல்கள் போயலியேவின் தலைமைத்துவத்திற்கு பெரும் சவாலாகப் பார்க்கப்படுகின்றன.
மெர்லின் கிளாடுவின் கருத்து: நாட்டை வழிநடத்த ஒரு “தீவிரமான தலைவர்” (Serious Leader) தேவை என்பதால் தான் மார்க் கார்னியின் அணியில் இணைந்ததாக அவர் தெரிவித்தார்.
கன்சர்வேடிவ் கட்சிக்குள் ஒற்றுமை நிலவுவதாக போயலியேவ் கூறினாலும், முக்கிய உறுப்பினர்களின் வெளியேற்றம் மற்றும் அவரது செய்தித் தொடர்பு இயக்குநரின் விலகல் போன்றவை கட்சிக்குள் நிலவும் நெருக்கடியைப் பிரதிபலிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.