பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன் என்று ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், “இந்த நினைவுச் சின்னம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூரும் புனித இடமாகவும், உயிர் தப்பியோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலின் அடையாளமாகவும் உள்ளது. இதனை சேதப்படுத்தியிருப்பது மிகவும் வெறுக்கத்தக்க செயல்” என தெரிவித்துள்ளார்.
தென் ஆசியாவிற்கு வெளியே மிகப்பெரிய தமிழ் சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படும் கனடா தமிழர்கள் வாழும் சமூகத்தின் அடையாளம் மற்றும் வரலாற்றுக்கு எதிரான நேரடி தாக்குதலாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வெறுப்பு மற்றும் இனப்படுகொலை மறுப்பு போன்ற செயல்களுக்கு ஒன்டாரியோவில் இடமில்லை” எனவும் தமிழ் மக்களின் வரலாற்றை பாதுகாக்கவும், உயிரிழந்தவர்களை நினைவுகூரும் அவர்களின் உரிமையை மதிக்கவும் தொடர்ந்து உறுதியாக நிற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.