சர்வதேச தரவுகளின்படி கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலைக்குரியது. ‘செழிப்பான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை நடைமுறைக்கு செயற்படுத்த வேண்டுமாயின் பிளாஸ்டிக் அச்சுறுத்தலற்ற அழகான சூழலை உருவாக்குவது அவசியமாகும். மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறியுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைக்கும் ‘நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு’ மற்றும் மீளச் சேகரிக்கும் மூலோபாய மாதிரி தொடர்பான விசேட விழிப்புணர்வு செயற்திட்டம் புதன்கிழமை (11) கொழும்பில் நடைபெற்றது.
அரச நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மேல்மாகாணத்தின் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.
மக்கள் இயற்கைப் பொருட்களால் ஆன பொதியிடல் முறைமைகளையே பயன்படுத்தினர்.கடந்த சில தசாப்தங்களாக நிலவும் தவறான மனப்பாங்கு காரணமாக பிளாஸ்டிக் பாவனைக்கு அடிமையானதால், பாரிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நெருக்கடிகளுக்கு சமூகம் என்ற அடிப்படையில் முகங்கொடுத்துள்ளோம்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, பிளாஸ்டிக் மற்றும் அது சார்ந்த உற்பத்திப் பொருட்களால் நீண்டகால அடிப்படையில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, யுத்தம் அல்லது தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புக்களை காட்டிலும் அதிகமாக இருக்கலாம்.
பிளாஸ்டிக் பாவனையின் தற்போதைய நிலையை அவதானிக்கும்போது, வருடாந்தம் 1.6 மில்லியன் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன.தினசரி கழிவு அளவு சுமார் 938 மெற்றிக்தொன்களாகும். சூழலில் இருந்து 32 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்படுகிறது.மொத்தக் கழிவுகளில் 4 சதவீதம் மட்டுமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த சமநிலையின்மையால், சர்வதேச தரவுகளின்படி கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிக பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலைக்குரியது.
அனுராதபுர காலத்தில் மன்னர் பண்டுகாபயன் கழிவு முகாமைத்துவத்துக்காக விசேட குழுக்களை நியமித்த வரலாறும் காணப்படுகிறது. பௌத்த தர்மத்தில் உள்ள ‘வனரோப சூத்திரம்’ ஊடாக சூழல் பாதுகாப்பு என்பது இரவும்,பகலும் புண்ணியம் சேர்க்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய சமூகம் பனை ஓலை மற்றும் இயற்கை பொதியிடல்களைப் பயன்படுத்தியது. ஆனால் இன்று வசதி மற்றும் இலாபம் ஆகியவற்றை தேடிச் சென்றதால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகையாகியுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைய ‘செழிப்பான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை நடைமுறைக்கு செயற்படுத்த வேண்டுமாயின் பிளாஸ்டிக் அச்சுறுத்தலற்ற அழகான சூழல் அவசியம்.மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.