நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று 8, அதிகாலை 1 மணியளவில் பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், தூதரகக் கட்டிடத்திற்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் நோர்வே பொலிஸாார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தூதரகத்தின் தூதரகப் பிரிவு (Consular section) நுழைவாயிலுக்கு அருகே ‘வெடிபொருள்’ அல்லது ‘தீமூட்டும் கருவி’ கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குண்டுவெடித்த இடத்தில் கரும்புகை சூழ்ந்திருந்ததாகவும், கண்ணாடி கதவுகள் மற்றும் விளக்குகள் சேதமடைந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒஸ்லோ காவல் விசாரணைப் பிரிவின் தலைவர் ஃப்ரோட் லார்சன் (Forde Larsen), தற்போதைய சர்வதேச பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இது திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கருதுகோளுடன் விசாரணை நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பிற காரணங்கள் குறித்தும் பொலிஸாார் ஆராய்ந்து வருகிறது நோர்வே வெளி விவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே (Espen Barth Eide), இந்தத் தாக்குதல் “ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்” என்றும், தூதரகங்களின் பாதுகாப்பிற்குத் தங்களது அரசு மிக உயர்ந்த முன்னுரிமை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் ஒஸ்லோவில் நிகழ்ந்த இந்த வெடிப்புச் சம்பவம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது தற்போது வரை இந்தச் சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.
நோர்வேயின் புலனாய்வு அமைப்பான பிஎஸ்டி (PST), மேலதிக பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த பயங்கரவாத அச்சுறுத்தல் நிலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.