2009 இறுதிப் போரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமோ அந்த எண்ணிக்கை 2764 என்று கணக்கு கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நீதி மற்றும் ஒருமைப்பாடு அமைச்சரிடம் நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் கேள்வியெழுப்பி உரையயாற்றும் போதே சாணக்கியன் எம்.பி இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009 இறுதிப் போரில் காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான விடயத்தில் தமிழ் மக்களின் கருத்துப்படி ஒரு இலட்சத்து 60ஆயிரம் வரையிலானவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்பதாகவே உள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் கருத்துப்படி அந்த எண்ணிக்கை 60 ஆயிரம், 70ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கின்றது. ஆனால் இலங்கை அரசினால் கூறப்படும் கணக்கு 2764 என்பது வேடிக்கையானதாக இருக்கின்றது.
அத்துடன் செம்மணி அகழ்வு பணிகள் விடயத்தில் அங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை ஏன் சர்வதேச ரீதியலான ஆய்வுகளுக்கு உட்படுத்தவில்லை. 96, 97 காலத்தில் மீட்கப்பட்டவை ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆய்வு நிறுவனமொன்றில் உள்ளன.
டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு உட்படுத்தலாம். பாதிக்கப்பட்ட மக்கள் நிராகரிக்கும் உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் நீங்கள் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம், நிதி ஒதுக்கீடு பற்றி கூறுகின்ற போதும், கொல்லப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஒரு வார்த்தையும் உங்களின் பதிலில் இல்லை.
ஊழல் மோசடியை இல்லாமல் செய்வதற்காக மட்டும் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. இவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும என்றும் நம்பியே வாக்களித்தனர்.
அதேபோன்று இழப்பீட்டு அலுவலகத்தின் 5 உறுப்பினர்களில் 3 உறுப்பினர்கள் இராணுவத்துடன் தொடர்புடையவர்களே. இதன்படி இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவமே விசாரணை நடத்தி, இழப்பீட்டையும் வழங்கப் போகின்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி பயன்படுத்தியதாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகின்றது. அவர்களின் உரிமை அது. அந்த மாணவர்களின் பெற்றோரின் புகைப்படங்களை காட்டி அவர்களின் முகவரி உள்ளிட்ட விடயங்களையும் குறிப்பிட்டு விசாரணைகளை நடத்துகின்றனர்.
2009இல் கொல்லப்பட்டவர்களுக்கும் நீதியில்லை. சர்வதேச ரீதியிலான விசாரணை பொறிமுறைகளுக்கு நீங்கள் இணங்கவும் இல்லை. தமிழ் மக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை எப்போதோ கைவிட்டுள்ளனர். ஆனால் நீங்கள் தமிழ் மக்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால் இந்த விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.