ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வு தொடங்கிய நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இலங்கை குறித்த தனது எழுத்துப்பூர்வ அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இது நாட்டின் மனித உரிமைச் சூழல், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயல்முறைகள் மீதான சர்வதேசக் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் பொதுச்செயலாளரின் அறிக்கைகள் மற்றும் பேரவையின் கவனத்தைக் கோரும் மனித உரிமைச் சூழல்கள் தொடர்பான புதுப்பிப்புகளைக் கையாளும் பேரவையின் நிகழ்ச்சி நிரலின் 2 ஆவது உருப்படியின் (Item 2) கீழ் இந்த எழுத்துப்பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களில் அரசாங்கத்தின் முன்னேற்றம் குறித்தான சர்வதேசக் கண்காணிப்பு தொடர்ந்து நிலவி வரும் சூழலில், OHCHR இன் இந்த அறிக்கை இலங்கையின் சமீபத்திய முன்னேற்றங்களை ஆராய்கிறது.
பேரவை அமர்வின் தொடக்கத்தில் இலங்கை தொடர்பான முக்கிய நிகழ்வுகளில் இந்த எழுத்துப்பூர்வ அறிக்கையின் சமர்ப்பிப்பும் ஒன்றாகும். அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நிலுவையில் உள்ள கவலைகள் உட்பட நாட்டினுடைய முன்னேற்றங்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் சமீபத்திய மதிப்பீட்டை இது வழங்குகிறது.
கடுமையான மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமலாக்கப்படுதல், சிவில் சமூக சுதந்திரப் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் ஆயுத மோதல்களின் வடுக்களுக்குத் தீர்வு காண்பதற்கான நம்பகமான பொறிமுறைகளின் அவசியம் ஆகியவை குறித்து ஐக்கிய நாடுகள் சபை நீண்டகாலமாகக் கொண்டுள்ள கவலைகளின் பின்னணியிலேயே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும், உள்நாட்டு நடைமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் தான் மேற்கொண்டுள்ள முயற்சிகளைச் சுட்டிக்காட்டியுள்ள ஒரு காலகட்டத்தைத் தொடர்ந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த சமீபத்திய மதிப்பீடு வந்துள்ளது.
எனவே, இலங்கையின் முன்னேற்றம் மற்றும் எஞ்சியுள்ள சவால்கள் குறித்து பேரவை பரிசீலித்து வரும் வேளையில், OHCHR இன் இந்த எழுத்துப்பூர்வ அறிக்கையின் சமர்ப்பிப்பானது இலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட குழுக்கள், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச அவதானிகளிடையே பெரும் கவனத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
63 ஆவது அமர்வு செப்டம்பர் 7 ஆம் திகதி ஜெனிவாவில் தொடங்கியதுடன் அக்டோபர் 7 ஆம் திகதி வரை தொடரும். அமர்வின் தொடக்கத்தில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் பேரவையில் உரையாற்றியதுடன், உலகளாவிய மனித உரிமை நிலைமை குறித்த தனது வாய்மொழி அறிக்கையையும் வழங்கினார்.