யங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு உடனடியாகத் இடைக்காலத் தடை விதித்தல்,அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் அச்சட்டத்தை முழுமையாக நீக்குதல் தொடர்பாக அரசாங்கம் சர்வதேச ரீதியில் வழங்கியுள்ள உறுதிமொழி என்ன? பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக பொறிமுறையை மறுத்துள்ள நிலையில் உள்ளக விசாரணை ஊடாகவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்கம் சர்வதேசத்துக்கு குறிப்பிடுகிறது.பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பில் அரசாங்கம் எவ்வாறு வெளிப்படையான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற அமர்வில் நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான வெளிப்படுத்தல்களை வரவேற்கிறோம். இதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பதில் மற்றும் நிலைப்பாடு பல கேள்விகளை தோற்றுவித்துள்ளன.
மோதல் தொடர்பான மனித உரிமை மீறல்கள் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும்,போதிய சான்றுகள் உள்ள நபர்களைத் தகுதியுள்ள நீதிமன்றங்களின் முன் கொண்டு வருவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் முன் அரசாங்கம் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதா? உயர்ஸ்தானிகரின் பொறுப்புக்கூறல் குறித்த கேள்விகளை நிவர்த்தி செய்ய மனித உரிமைகள் பேரவைக்கு அளிக்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவை என அரசாங்கம் கருதுகின்றதா?
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்குத் தொடரல்கள் குறித்து சர்வதேச ரீதியில் அரசாங்கம் தெரிவித்துள்ள நிலைப்பாடு என்ன? இதில் 2018 ஆம் ஆண்டின் சட்டம் ஏதேனும் வழக்குத் தொடரலில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? மேலும், அரச அதிகாரிகளுக்கு எதிரான நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறதா?
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் காணாமலாக்கப்பட்டமை விவகாரத்தில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் துரிதகரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை வரவேற்கிறோம். பொறுப்புக்கூறல் மற்றும் தமிழ் மக்களுக்கான நீதி வழங்கலில் இந்த வேகம் காணப்படுகிறதா ?
உள்ளக விசாரணைகள் மீது பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நம்பிக்கை இல்லை என்பதையும்,அச்சமூகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற வகையில்தமிழ் பாதிக்கப்பட்ட சமூகம் உள்நாட்டு வழிமுறைகளை மட்டும் ஒரு போதுமான தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன்.
இந்தச் சூழலில்,அர்த்தமுள்ள சர்வதேச பங்கேற்பு,சுயாதீன அரச வழக்கறிஞர்கள்,சர்வதேச தடயவியல் நிபுணத்துவம்,பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்பு, மற்றும் கட்டளைப் பொறுப்பு உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் பற்றிய விசாரணை தொடர்பாக மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள நிலைப்பாடு என்ன? பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக பொறிமுறையை மறுக்கும் நிலையில் அரசாங்கம் உள்ளக பொறிமுறை ஊடாகவே விசாரணைகளை முன்னெடுப்பதாக சர்வதேச சமூகத்துக்கு அறிவித்துள்ளது.
செம்மணி-சித்துப்பாத்தி மனிதப் புதை குழியில் இதுவரையில் 582 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை மற்றும் சர்வதேச தடயவியல் உதவி குறித்து மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் தெரிவித்துள்ள நிலைப்பாடு என்ன?
பாதுகாப்புப் படையினரால் முன்னர் பயன்படுத்தப்பட்ட நிலங்களில் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. இராணுவம்,தொல்பொருள் திணைக்களம்,வனவிலங்கு திணைக்களம்,வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள அல்லது உரிமை கோரப்படும் அனைத்து நிலங்கள் தொடர்பாகவும் சர்வதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் எவை என்பதை அமைச்சர் தெரிவிப்பாரா? காணி விடுவிப்பு தொடர்பில் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு அறிவிக்க வேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு உடனடியாகத் இடைக்காலத் தடை விதித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் அச்சட்டத்தை முழுமையாக நீக்குதல் தொடர்பாக அரசாங்கம் சர்வதேச ரீதியில் வழங்கியுள்ள உறுதிமொழி என்ன? தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமானது என்று குறிப்பிடப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தல்கள்,வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கான காலவகாசம் மற்றும் நிலைப்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கம் தெரிவித்துள்ள பதில் என்ன? மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராய்வதற் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நானும் உறுப்பினராக உள்ளேன். அங்கு காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே இடம்பெறுகிறது.
பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பில் அரசாங்கம் எவ்வாறு வெளிப்படையான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கம் மந்தகதியாகவே செயற்படுகிறது. உள்ளக விசாரணையை பாதிக்கப்பட்ட மக்கள் மறுத்துள்ளார்கள்.கடந்த மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற காணாமல் போனோர் தினத்தில் அதனை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் அரசாங்கம் உள்ளக விசாரணை ஊடாகவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சர்வதேசத்துக்கு குறிப்பிடுகிறது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நீதி வழங்கல் துரிதப்படுத்தப்பட வேண்டும் அதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். ஊழல் ஒழிப்புக்காகவும், திருடர்களை கைது செய்வதற்கும் எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். ஊழல் மோசடி குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிறைவேற்றப்பட்டால் அவருக்கு தண்டனையளிக்க வேண்டும் என்றார்.