இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு கிடைக்குமென இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே, இன்றைய நிலவரப்படி, கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கப்பல் ஒன்று தரையிறக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இது சுமார் 18 நாட்களுக்குத் தேவையான எரிபொருளை உற்பத்தி செய்யக்கூடிய மசகு எண்ணெயைக் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, இந்த மாதத்தில் மேலும் 4 கப்பல்கள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 14, 15 ஆம் திகதிகளில் 19,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 21,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல்கள் வரவுள்ளன.
மார்ச் 17, 18 ஆம் திகதிகளில் சிங்கப்பூரில் இருந்து தலா 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் அடங்கிய மற்றுமொரு கப்பல் வரவுள்ளது.
மார்ச் 21, 22 ஆம் திகதிகளில் இந்தியாவில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் அடங்கிய கப்பல் ஒன்று வரவுள்ளது.
மார்ச் 27, 28 ஆம் திகதிகளில் இந்தியாவில் இருந்து 35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் வரவுள்ளது.
மார்ச் 29, 30 ஆம் திகதிகளில் சிங்கப்பூரில் இருந்து 37,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு வரவுள்ளது.
இதன்படி, இந்த மாதத்திற்காக நாங்கள் முன்பதிவு செய்த அனைத்து கப்பல்களும் வருவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் சில ஏற்கனவே இலங்கையை நோக்கிப் புறப்பட்டுள்ளன.
இந்த கப்பல்கள் மூலம் கிடைக்கும் எரிபொருள் கையிருப்பானது அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதி வாரம் வரை போதுமானதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.