ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் இன்று ஆரம்பமாகும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை, அதற்கு முன்னோடியாக நடைபெற்ற இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளது.
இந்த வெற்றிகளை அடுத்து உற்சாகம் அடைந்துள்ள இலங்கை இளையோர் அணி உலகக் கிண்ண கிரிக்கெட்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.
தென் ஆபிரிக்க இளையோர் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனது முதலாவது பயிற்சிப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 12 ஓட்டங்களால் இலங்கை இளையோர் அணி வெற்றிபெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் இளையோர் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சிப் போட்டியிலும் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை இறுக்கமான வெற்றிகளையீட்டியதால், உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக பிரயாசை எடுத்துக்கொண்டு விளையாட வேண்டி வரும்.
விண்ட்ஹோக்கில் நேற்று நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.
கவிஜ கமகே 97 ஓட்டங்களையும் துல்னித் சிகேரா 85 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் ஜோடி சேர்ந்து 4ஆவது விக்கெட்டில் 170 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
241 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து நல்ல நிலையில் இருந்த இலங்கை அதன் பின்னர் 5 விக்கெட்களை 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.
விரான் சமுதித்த 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
267 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு ஆப்கானிஸ்தான் இளையோர் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஆட்டம் மழையினால் தடைப்பட்டது.
ஆட்டம் தொடர்ந்தபோது அதன் வெற்றி இலக்கு 23.5 ஓவர்களில் 118 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.
ஆப்பானிஸ்தான் 23.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று 7 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
பந்துவீச்சில் விக்னேஸ்வரன் ஆகாஷ் 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மலின்த சில்வா 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ரசித் நிம்சார 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.