உயிரே போனாலும் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மதுரை உத்தங்குடியில் இன்று (பிப். 21) நடைபெறும் தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி, பி. மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத் தொகையை மத்திய அரசு நிறுத்தப் பார்த்தது. ஆனால், காலையிலேயே ரூ. 5,000 என்ற ஆச்சரியம் கொடுத்ததுமே மத்திய அரசுக்குப் பயந்து மக்கள் உடனே வங்கிக்குச் சென்று தங்கள் பணத்தை எடுத்துக் கொண்டனர்.
மக்களுக்காக கொடுத்தால் அது திமுக. ஆனால், மக்களிடம் இருந்து எடுத்துக் கொண்டால் அது மத்திய அரசு. நமது மாநிலம் வரலாறு காணாத வளர்ச்சி அடைத்திருக்கிறது. அது எதிரிகளின் கண்ணை உறுத்துகிறது. வாக்காளர்களை கனிவாக பணிவாக நடத்த வேண்டும். மக்கள்தான் எஜமானர்கள்; நாம் சேவகர்கள்.
பழனிசாமி போல நாங்கள் கோழைகள் அல்ல; ஆட்சியல்ல, பதவியல்ல.. உயிரே போனாலும் கவலைப்படாமல் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்போம். வழக்குப் போடுவியா போடு… நாங்கள் பார்க்காத மிசாவா? தடாவா?” எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.