இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அமெரிக்கா ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தியதா என வினவப்பட்ட கேள்விக்கு, அமெரிக்க தூதரகப் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், தனியார் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் உள்ளடக்கங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
“தனியார் இராஜதந்திர உரையாடல்களின் உள்ளடக்கங்கள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை. தடைசெய்யப்பட்ட கப்பல்கள் உட்பட அமெரிக்க தடைகள் தொடர்பான தகவல்கள், அமெரிக்க நிதியமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் (OFAC) மூலம் பகிரங்கமாகக் கிடைக்கப்பெறுகின்றன,” என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.
சுமார் 13 ஈரானியக் கொடிகளை ஏந்திய கப்பல்கள் உட்பட சுமார் 20 ஈரானிய எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகில் திரண்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியிருந்தன. சர்வதேச தடைகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் “நிழல் கடற்படை” (shadow fleet) என அழைக்கப்படும் கப்பல்களின் ஒரு பகுதியாக ஏனைய சில கப்பல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCLOS) 58வது உறுப்புரையின்படி, ஒரு கடலோர அரசு தனது பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) சிறப்பு உரிமைகளைக் கொண்டிருந்தாலும், நிலத்தால் சூழப்பட்ட நாடுகள் உட்பட பிற நாடுகளும் அங்கு சில சுதந்திரங்களைக் கொண்டுள்ளன. UNCLOS இன் உறுப்புரை 87, திறந்தவெளிப் பெருங்கடலானது கடலோர அல்லது நிலத்தால் சூழப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் திறந்தே உள்ளது எனக் கூறுகிறது.
இருப்பினும், எந்தவொரு கடலோர அரசும் அதன் அடிப்படைக்கோட்டிலிருந்து (baseline) 12 கடல் மைல்கள் வரை நீடிக்கும் தனது பிராந்திய கடற்பரப்பில் முழுமையான இறைமையைக் கொண்டுள்ளது. இந்தக்கப்பல்கள் ஏதேனும் அதன் பிராந்தியக் கடற்பரப்பிற்குள் நுழையும் பட்சத்தில் இலங்கையால் நடவடிக்கை எடுக்க முடியும்