இலங்கை எப்போதெல்லாம் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் புதுடெல்லி தனது முழு பலத்துடனும் இலங்கையின் பக்கம் நிற்கும் என உறுதியளித்த வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் நாகரிகத் தொடர்புகளை வலியுறுத்தினார்.
இலங்கைக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் போது கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூக வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய சிங், இலங்கையை இந்தியாவின் “மிக நெருங்கிய நண்பன்” என விவரித்ததுடன், அண்டை நாடுகளுடன் வலுவான உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
“இந்தியா இலங்கையை ஒரு மிக நெருங்கிய நண்பனாகக் கருதுகிறது. இந்த நிதர்சனத்தை இந்தியா மிக நன்றாகப் புரிந்துகொண்டுள்ளது — வாழ்க்கையில் எல்லாமே மாறலாம், ஆனால் அண்டை நாடுகள் ஒருபோதும் மாற முடியாது. வாழ்க்கையில் நண்பர்கள் மாறலாம், ஆனால் அண்டை நாடுகள் ஒருபோதும் மாற முடியாது,” என்று அவர் கூறினார்.
அண்டை நாடுகளைக் குடும்ப உறுப்பினர்களாக நடத்துவதே இந்தியாவின் நீண்டகால பாரம்பரியம் என்று கூறிய சிங், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியினரைச் சந்தித்ததில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“இங்கு வந்த பிறகு எனக்கு ஒரு சொந்த உணர்வு ஏற்படுகிறது,” என்று கூறிய அவர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சார, மக்களுக்கிடையிலான, வணிக மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைக்கான தனது முதலாவது இருதரப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ளதோடு, சுமார் நான்கு தசாப்தங்களில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை செல்லும் முதலாவது விஜயமாகவும் இது அமைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது என அவர் கூறினார்.
கடினமான காலங்களில் இலங்கைக்கு இந்தியா அளித்து வந்த ஆதரவை நினைவு கூர்ந்த அவர், எதிர்கால நெருக்கடிகளின் போதும் கொழும்புடன் இணைந்து நிற்பதற்கான புதுடெல்லியின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
“ஒவ்வொரு கடினமான கட்டத்திலும் இந்தியா இலங்கையுடன் இணைந்து நின்றுள்ளது. இன்று, மீண்டும் ஒருமுறை, பாதுகாப்பு அமைச்சராகவும், இந்திய அரசாங்கத்தின் அமைச்சராகவும் நான் கூற விரும்புவது என்னவென்றால், இலங்கையில் எப்போது நெருக்கடி ஏற்பட்டாலும், இந்தியா தனது முழு பலத்துடன் இலங்கை அரசாங்கத்துடன் நிற்கும்,” என்று சிங் கூறினார்.
இந்தியாவின் அதிகரித்து வரும் பொருளாதார விரிவாக்கம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தியின் அதிகரிப்பு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு குறித்தும் உரையாற்றினார்.
சர்வதேச அளவில் இந்தியாவின் நம்பகத்தன்மை கணிசமாக வளர்ந்துள்ளதாகக் கூறிய அவர், சர்வதேச மன்றங்களில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் போது உலகம் இப்போது கவனமாகக் கேட்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியின் அதிவேக விரிவாக்கம் குறித்துச் சுட்டிக்காட்டிய அவர், சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு தோராயமாக 60 மில்லியன் ரூபாயாக இருந்த பாதுகாப்பு ஏற்றுமதி இன்று சுமார் 3,900 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டண முறைமை (UPI) மூலமான பரிவர்த்தனைகளின் கணிசமான அதிகரிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் அதிவேக வளர்ச்சியின் மற்றொரு துறை என்றும் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய வம்சாவளியினர் வகிக்கும் முக்கிய பங்கை இந்திய பாதுகாப்பு அமைச்சர் மேலும் வலியுறுத்தினார், அச் சமூகத்தை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய பாலமாக விவரித்தார்.
இலங்கைத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தனது மூன்று நாள் விஜயத்திற்காக சிங் இன்று காலை கொழும்பு வந்தடைந்தார்.
இந்தியாவும் இலங்கையும் தங்களுக்கிடையேயான பாரம்பரியமிக்க நெருங்கிய இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த முயன்று வரும் வேளையில், பாதுகாப்பு மற்றும் சமுத்திர ஒத்துழைப்பு ஆகியவை இதில் முக்கிய கவனத்திற்குரிய துறைகளாக உள்ளன.