.சாதகமான காலப்பகுதிகளில் இலங்கை போதியளவு வெளிநாட்டுச் செலாவணிக் கையிருப்புப் பாதுகாப்பை (reserve buffers) கட்டியெழுப்ப வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அடுத்த வெளிப்படை நெருக்கடி தாக்கும் வரை காத்திருப்பது தாமதமாகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.
“கையிருப்புத் தேவைப்படுவதற்கு முன்னரே அது கட்டியெழுப்பப்பட வேண்டும். ஒரு நாடு ஏற்கனவே வெளிப்படை நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, கையிருப்பைக் கட்டியெழுப்பத் தொடங்குவது மிகவும் தாமதமானதாகும்” என, 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மேற்கோள் காட்டி அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற முதலாவது கையிருப்பு மேலாண்மை மாநாட்டில் (Reserve Management Conference 2026) முதன்மை உரையாற்றிய ஆளுநர், போதிய வெளிநாட்டுக் கையிருப்பு இல்லாமல் ஒரு நாடு பொருளாதார அதிர்ச்சியைச் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை 2022ஆம் ஆண்டின் நெருக்கடி மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளதாகக் கூறினார்.
கையிருப்பு மிகக் குறைந்த நிலைக்குத் தள்ளப்படும் போது, இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டு, கடன் சேவையாற்றுவது கடினமாகி, அந்நியச் செலாவணி மாற்று விகித அழுத்தங்கள் தீவிரமடைந்து, பணவீக்கம் அதிகரிப்பதுடன் நாட்டின் மீதான நம்பிக்கையும் சீர்குலைகிறது.
மிக முக்கியமாக, மேலும் வரும் பொருளாதார அதிர்ச்சிகளுக்குப் பதிலளிப்பதற்கான கொள்கை இடைவெளி (policy space) கடுமையாகக் குறைகிறது என்று அவர் தெரிவித்தார்.
“போதிய கையிருப்பு என்பது ஒரு ஆடம்பரம் அல்ல. அது மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையின் (macroeconomic stability) அத்தியாவசிய அங்கமாகும்” என்று கலாநிதி நந்தலால் வீரசிங்க வலியுறுத்தினார்.
2022-2023 கடினமான காலப்பகுதியுடன்ப்பிடுகையில், இலங்கை விரிவான மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வெளிநாட்டுத் துறையை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.
இருப்பினும், கையிருப்பைக் கட்டியெழுப்புவது ஒரு நேர்கோட்டுச் செயல்முறை (linear process) அல்ல என்றும், நல்ல காலத்தில் சேர்க்கப்படும் கையிருப்பு வெளிப்புற அதிர்ச்சிகள் ஏற்படும் போது வேகமாக கரையக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனவே, இன்றியமையாத கேள்வி என்னவென்றால், இலங்கையிடம் இன்று எவ்வளவு கையிருப்பு உள்ளது என்பது மட்டுமல்ல, அந்த கையிருப்பு எவ்வளவு மீள்தன்மை மற்றும் அணுகல்தன்மை கொண்டது, அதை எவ்வளவு விரைவாகப் பயன்படுத்த முடியும், அடுத்த அதிர்ச்சியைத் தாங்க அது போதுமானதா என்பதுதான் என்று அவர் கூறினார்.
நம்பிக்கை வலுவாக இருக்கும் போதும், மூலதனம் நாட்டின் உள்நோக்கிப் பாயும் போதும், ஏற்றுமதி அதிகரிக்கும் போதும், அந்நியச் செலாவணி புழக்கம் அதிகமாக இருக்கும் போதும் கையிருப்பைக் சேகரிப்பது மிக எளிதானது என்று ஆளுநர் தெரிவித்தார்.
முரண்நகை என்னவென்றால், இதுபோன்ற சாதகமான சூழ்நிலைகளே என்றென்றும் நீடிக்கும் என்று தவறாகக் கணிக்கும் சூழலை உருவாக்குகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“நல்ல காலங்கள் என்றென்றும் நீடிக்காது என்பதை நாம் அறிவோம், எனவேதான் நல்ல காலத்திலேயே கையிருப்புப் பாதுகாப்பை நாம் உருவாக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
மேலும், கையிருப்பைக் கட்டியெழுப்புவது பரந்த மேக்ரோ பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்து தனித்துச் செய்ய முடியாது என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அதிகப்படியான தலையீடுகள் சந்தை சமிக்ஞைகளைச் சிதைக்கக்கூடும், அதிகப்படியான பண விரிவாக்கம் பணவீக்க அழுத்தங்களை உருவாக்கக்கூடும், அதே நேரத்தில் வெளிநாட்டுக் கடன்களைப் பெருமளவில் நம்பியிருப்பது எதிர்காலக் கடன் பொறுப்புகளை மட்டுமே உருவாக்கும் என்றார்.
இலங்கையைப் பொறுத்தவரை, நிலையான கையிருப்புச் சேகரிப்பானது வலுவான வெளிநாட்டுத் துறை அடிப்படைகள் மற்றும் நிதி-நாணயக் கொள்கைகளின் நம்பகத்தன்மையால் தாங்கிப்பிடிக்கப்பட வேண்டும்.
“எனவே, மிகவும் நிலையான கையிருப்புச் சேகரிப்பு உத்தி என்பது வெறும் கையிருப்பைப் பெறுவது மட்டுமல்ல. அது இயற்கையாகவே அந்நியச் செலாவணியை உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகும்,” என்று அவர் கூறினார்.
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தக மோதல்கள், நிலையற்ற பொருட்கள்/எரிபொருள் விலைகள், வட்டி விகித சுழற்சிகளின் மாற்றம் மற்றும் வேகமாக மாறும் உலகளாவிய மூலதனப் பாய்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வலுவான கையிருப்புப் பாதுகாப்பின் தேவை மிகவும் அவசியமாகியுள்ளது.
எரிபொருளை இறக்குமதி செய்யும் ஒரு பொருளாதாரம் என்ற வகையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றம் இலங்கையைப் பெருமளவில் பாதித்து இறக்குமதிச் செலவை உடனடியாக உயர்த்தக்கூடும். அதே நேரத்தில், புவிசார் அரசியல் பதற்றங்கள் சுற்றுலாத் துறை மற்றும் பிற அந்நியச் செலாவணி வருவாய் வழிகளைப் பாதிக்கலாம்.
இத்தகைய சூழ்நிலை, வெளிநாட்டுச் செலாவணி உள்ளீடுகள் பலவீனமடையும் அதே வேளையில் வெளியீடுகள் அதிகரிக்க வழிவகுக்கும், இது கையிருப்பு உறிஞ்ச வேண்டிய சரியான அழுத்தத்தை உருவாக்கும்.
நிலையான கையிருப்பு மறுசீரமைப்பிற்கு இறுதியாகச் சரியான மேக்ரோ பொருளாதார அடிப்படைகள், கொள்கை நம்பகத்தன்மை மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவை தேவைப்படுகின்றன என்றும், இந்த செயல்முறைக்கு எந்தக் குறுக்குவழியும் இல்லை என்றும் வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
“ஒரு நெருக்கடியை எதிர்பார்க்கிறோம் என்பதால் நாம் கையிருப்பை உருவாக்கவில்லை. அடுத்த நெருக்கடி எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது என்பதற்காகவே கையிருப்பை உருவாக்க வேண்டும்,”