பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீள கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு 1893 மில்லியன் ரூபா நிதி உதவி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூலம் இந்த நிதி கிடைத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சரின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தித்வா புயலினால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
அனர்த்த நிலையால் சேதமடைந்த வர்த்தகங்கள், சொத்துக்கள் மற்றும் உயிர்களுக்கு உடனடி இழப்பீடு வழங்குவதற்கான பொறிமுறையை அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.
இந்த திட்டத்தின்படி,சொத்துக்களுக்கு ஏற்பட்ட சிறிய சேதங்களுக்கு உடனடி இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாரிய சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான தகவல்களைச் சேகரித்த பின்னர் இழப்பீடு வழங்கவும், முதற்கட்டாக ஒரு தொகையை வழங்கவும் காப்புறுதி நிறுவனங்கள் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளன.