லங்கா ஸ்போர்ட்ரைசன் நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூர், சிங்ககப் (SingaCup) பிறைவேட் லிமிட்டெட் ஏற்பாடு செய்துள்ள 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான அங்குரார்ப்பண கோப்பா சிம்ஹா (சிங்க கிண்ணம்) கால்பந்தாட்டத் திருவிழா கொழும்பில் நடத்தப்படவுள்ளது.
இந்தக் கால்பந்தாட்ட திருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நடத்தப்படும்.
இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள சிறார்களின் கால்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் குறிக்கோளுடன் இலங்கையில் முதல் தடவையாக 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோப்பா சிம்ஹா கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படுவதாக சிங்கப்பூர் சிங்ககப் பிறைவேட் லிமிட்டெடின் முகாமைத்துவப் பணிப்பாளர் செல்வகுமார் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
‘பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள சிறார்களை இலக்குவைத்தே இப்போட்டியை நடத்துகின்றோம். இப் போட்டி இலங்கையில் முதல் தடவையாக நடத்தப்படுவதால் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படமாட்டாது. எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பங்குபற்ற அனுமதிக்கப்படும். நாங்கள் கொழும்பில் நடத்தும் சிறார்களுக்கான கால்பந்தாட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் என நம்புகிறோம். அதன் பின்னர் 8, 14, 16 வயதுடைய சிறுவர்களுக்கும் போட்டிகளை நடத்த எண்ணியுள்ளோம். அத்துடன் பிற மாவட்டங்களிலும் இந்தப் போட்டியை விஸ்தரிக்க எண்ணியுள்ளோம்.
‘இலங்கையில் நடத்தப்படும் கோப்பா சிம்ஹா கால்பந்தாட்டப் போட்டியில் ஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் குறைந்தது நான்கு போட்டிகளில் பங்குபற்றும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படும். முதல் சுற்று முடிவில் முன்னிலையில் இருக்கும் அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெறும். போட்டியில் சம்பியனாகும் அணிக்கு சிங்கப்பூரில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சிங்ககப் போட்டியில் பங்குபற்ற வாய்ப்பு கிடைக்கும்’ என செல்வகுமார் பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் அணிக்கு 11 வீரர்களைக் கொண்ட சிங்ககப் (சிங்க கிண்ணம்) கால்பந்தாட்டப் போட்டி 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் 12 வயதினருக்கு மாத்திரம் நடத்தப்பட்ட இப் போட்டி 8, 10, 14, 16 ஆகிய வயதுக்குட்பட்டவர்களுக்கும் நடத்தப்படுகிறது. இப் போட்டிகளில் 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 170 முதல் 180 அணிகள் பங்குபற்றிவருகின்றன.
இந்தத் தகவல்களையும் செல்வகுமார் பன்னீர்செல்வம் வெளியிட்டார்.