இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மத்திவ் ஜோன் டக்வேர்த் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் பற்றியும், இரு நாடுகளின் மக்களுக்கு இடையேயான உறவுகள் பற்றியும் கவனம் செலுத்திய பிரதமர், பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் பிராந்திய உரையாடலை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் இலங்கையின் ஆர்வம் குறித்தும் நினைவுபடுத்தியதுடன், பிராந்திய மற்றும் பல்தரப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அத்தோடு, தொழில்சார் கல்வித் துறையின் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதின் அவசியம் குறித்து இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது. தொழில்சார் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைச் சட்டகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவை கோரிய பிரதமர், தொழில்சார் கல்வித் துறையை பலப்படுத்துவதற்கான அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மத்திவ் ஜோன் டக்வேர்த் , முதல் செயலாளர் (அபிவிருத்தி) திருமதி. Zoe Kidd மற்றும் இலங்கை Austrade இன் கல்விப் பணிப்பாளர் திருமதி. Sandi Seneviratne,பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, கிழக்காசிய மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் Dhawood Amanullah, கிழக்காசிய மற்றும் ஓசியானியா பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. திலோமா அபயஜீவ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
By C.G.Prashanthan