இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது மற்றும் கல்வி அறக்கட்டளையை (CEWET) நவீனமயப்படுத்துவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரிடம் சந்தோஷ் ஜாவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில், கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் மற்றும் பாரத் அருள்சாமி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இலங்கை வாழ் மலையகத் தமிழர்கள் விரும்பும் பட்சத்தில், அவர்களுக்கு இலகுவான தகுதி அடிப்படையில் OCI அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
மொரீஷியஸ் நாட்டிற்கு இந்தியா வழங்கும் OCI கட்டமைப்பை இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கும் ஒரு முன்மாதிரியாகக் கொள்ளலாம்.
1964ஆம் ஆண்டு சிறிமா–சாஸ்திரி ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் வரலாற்றை அங்கீகரிப்பதோடு, அவர்களின் கல்வி, தொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வலுப்படுத்த இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக அமையும்.
முன்னேற்றத்தை விட, இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்கள் அரசியல் சூழலால் பின்னடைவை எதிர்கொள்வதால் இந்த உதவி அவசியம்.
1946 முதல் இயங்கி வரும் ‘தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை’ (CEWET) என்பதை, இன்றைய சமூக மாற்றத்திற்கு ஏற்ப “இந்திய வம்சாவளித் தமிழர் – சமூக மேம்பாட்டு அறக்கட்டளை” (IOT-CDT) எனப் பெயர் மாற்றம் செய்து விரிவுபடுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.
இதன் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டிய ஐந்து முக்கிய திட்டங்கள்:
புலமைப் பரிசில்: கல்விக்கான உதவித்தொகையையும், பயனாளிகளின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரித்தல்.
ஆசிரியர் பயிற்சி: பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கான தமிழ் வழி ஆசிரியர் பயிற்சி கலாசாலையை நிறுவுதல்.
தாதியர் பயிற்சி: மலையகப் பெண்களின் தொழில் முன்னேற்றத்திற்காகத் பிரத்யேக தாதியர் பயிற்சி நிறுவனத்தை அமைத்தல்.
சர்வதேச பாடசாலைகள்: இந்திய நவோதயா பாடசாலைகளின் முறைப்படி இலங்கையில் ‘இந்து சர்வதேச பாடசாலைகளை’ உருவாக்குதல்.
பல்கலைக்கழக வளாகம்: நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த “High-Lands University Campus” எனும் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவி, காலப்போக்கில் அதனைத் தேசிய பல்கலைக்கழகமாக உயர்த்துதல்.
அரசியல் யதார்த்தம்
மலையகத் தமிழர்களில் தற்போது சுமார் ஒரு இலட்சம் பேர் மட்டுமே நேரடித் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். ஏனையோர் சுயமுயற்சியால் வர்த்தகம் மற்றும் பல்வேறு துறைகளில் வளர்ந்து ஒரு தேசிய சிறுபான்மை இனமாக உருமாற்றம் அடைந்துள்ளனர்.
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வரை எமது முன்மொழிவுகளை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளோம். இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு இந்திய அரசு உரிய தீர்வுகளை வழங்க வேண்டும்” என மனோ கணேசன் இந்திய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்.