ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு, 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பிரதமர் மோடி அறிவித்தார்.
டில்லியில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிறகு பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் கூட்டாக நிருபர்கள் சந்தித்தனர். அப்போது என் நண்பர் புடின் எனக்கூறிய பேட்டியை தொடங்கிய பிரதமர் மோடி, இந்தியா – ரஷ்யா உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: இந்தியா, ரஷ்யா இரு நாட்டு உறவு பலமானது . இந்த நட்புறவுக்கு 25 ஆண்டுக்கு முன்பே, அதிபர் புடின் நமக்கு உதவியாக இருந்தார்.
ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பல மாற்றங்களுக்கு மத்தியிலும் இந்தியா-ரஷ்யா உறவு உறுதியாக உள்ளது. இந்தியா-ரஷ்யா ஏற்றுமதி வர்த்தகத்தில் புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளுக்கு இடையே எரிசக்தி துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உலகில் அமைதிக்காக ரஷ்யாவுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் . உலகில் பயங்கரவாத ஒழிப்பில் முழு கவனத்துடன் செயல்படுவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் ஒன்றாக நின்று போராடி வருகின்றன. நமது இருதரப்பு உறவுகள் பல வரலாற்று மைல்கற்களைக் கடந்து செல்லும் நேரத்தில், ரஷ்ய அதிபர் புடின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியா-ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கு இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். 2030ம் ஆண்டு வரை இந்தியா-ரஷ்யா பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்துக்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் நிரந்தர தீர்வு காண மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். உக்ரைன் பிரச்னையில் இந்தியா ஆரம்பத்திலிருந்தே அமைதியை ஆதரித்து வருகிறது. உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த இந்தியா எப்போதும் தனது பங்களிப்பை வழங்க தயாராக உள்ளது, எதிர்காலத்திலும் இந்த நிலைப்பாடு தொடரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.