தமக்கான ஊதியத்தை குறித்த காலப்பகுதியில் மாதாந்தம் வழங்குவதுடன் அரச போக்குவரத்து சேவையை திணைக்களம் ஆகும் பட்சத்தில் அதிகாரிகள் கூறுவது போன்று இணைந்து சேவையை முன்னெடுக்க தாம் தயாராக இருப்பதாக இ.போ.சபையின் யாழ் பிராந்திய நேர கணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (29) அன்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவின் பேருந்து நிலைய கள விஜயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துக் கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் –
எமது சபை மிக நஷ்டத்தில் இருக்கின்றது. ஊதியங்கள் கூட ஒழுங்காக கிடைப்பதில்லை. இதற்கெல்லாம் தனியார் சேவையின் காட்டு மிராண்டித்தனமான செயற்பாடுகள் காரணமாக இருக்கின்றன.இவ்வாறான நிலையில் சாத்தியமற்ற ஒரு நடவடிக்கையை சாத்தியமாக்க MP மாரும் அரசஅதிகாரிகளும் அழுத்தங்களை எம் மீது திணிக்கின்றனர்.
நாம் தனிப்பட்ட ஒரு கட்டமைப்பு. எமக்கென ஒருவரையறை இருக்கின்றது.இதை நாம் மீறி செயற்படவில்லை. எமது சபையின் அபிவிருத்திகளுக்கு நாம் தடையாக இருக்கப் போவதில்லை.
ஆனால் அதிகாரிகளும் MP க்களும் நினைப்பது போன்று இணைந்த சேவையை நடத்த வேண்டுமானால் முதலில் எமது ஊதியத்தை குறித்த காலப்பகுதியில் மாதாந்தம் வழங்குவதுடன் அரச போக்குவரத்து சேவையை திணைக்களம் ஆக்க இவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு நடைபெற்றால் நாம் அவர்களின் கருத்தின் படி செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.