அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி, சர்வதேசத்தை நாடுவதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இது தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, “ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுள்ளன.
அரச அலுவலகங்களுக்குள் புகுந்து மக்கள் பிரதிநிதிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சமான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களின் பாதுகாப்பே அச்சுறுத்தலில் உள்ளது என்றால், பொதுமக்களின் பாதுகாப்புத் தொடர்பில் நாங்கள் அச்சமடைகின்றோம்.
ஆயுதக் குழுக்களையும், போதைப்பொருள் குழுக்களையும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு கூறுகின்றது. ஒரு கட்சியாக அரசின் இந்தத் திட்டங்களை ஆதரிக்கின்றோம். அதேநேரம், ஆயுதக் குழுக்கள் என்ற போர்வையில் அரசியல் தலைவர்களை இலக்கு வைப்பதைத் தீர்க்கமாக எதிர்க்கின்றோம்.
நாட்டின் பாதுகாப்பை அரசு விரைவில் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையிலும், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இது தொடர்பில் முறையிடுவோம்.” என்றார்.