அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவு (Sri Lanka CERT) நிறுவனம் அண்மையில் நடத்தியுள்ளது.
அரசு அதிகாரிகளின் டிஜிட்டல் பாதுகாப்புத் திறனை வளர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தலுக்கு இணங்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவு இணைந்து இதனை ஒருங்கிணைத்துள்ளன.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உட்பட அனைத்துத் திணைக்களத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டனர்.
இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த , இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல மற்றும் சைபர் பாதுகாப்பு திறன் மேம்பாட்டு திட்ட மேலாளர் திலின திசாநாயக்க ஆகியோர் பயிற்சி வழங்கிய நிபுணர்களாவர்.
இப்பயிற்சியின் போது சமூக ஊடகங்களை சட்டப்பூர்வமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துதல்,சமூக ஊடகங்களில் ஏற்படும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்தல்,வேகமாக அதிகரித்து வரும் சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வு பெறுதல் மற்றும் முக்கியமான மற்றும் இரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறை அறிவு போன்ற முக்கிய விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தேசிய மட்டத்திலான சைபர் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக, அரச நிறுவனங்களில் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஸ்ரீலங்கா சர்ட் முன்னெடுத்து வரும் விரிவான நடவடிக்கைகளில் இது ஒரு மைல்கல்லாகும்.