அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்து, கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் நேற்றுமுன்தினம் (07.01.2026) திகதியிட்டு அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.
சிறீதரனின் கிளிநொச்சி, வட்டக் கட்சி முகவரிக்கு இது தொடர்பான கடிதத்தைப் பதிவுத்தபாலில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ளார்.
அரசமைப்பு கவுன்ஸிலில் சிறீதரனின் நடத்தை தொடர்பாக அரசியல் குழு ஆராய்ந்து கண்ட விடயங்களை இந்தக் கடிதத்தில் சுமந்திரன் விலாவாரியாக விவரித்திருக்கின்றார் என தெரியவருகின்றது.
”இந்த பின்புலத்தில் இந்த பதவியில் தொடர்வது உங்களுக்கும் சங்கடம். கட்சிக்கும் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகையினால் மேற்படி பதவியில் இருந்து விலகுவதன் மூலம் தங்களுக்கும் கட்சிக்கும் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்” – என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அடுத்த ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுத்து கட்சிக்கு அறிவுக்குமாறு கட்சியின் பொதுச்செயலாளர், சிறீதரன் எம்.பியை வேண்டியுள்ளார்.
இந்த கடிதம் தொடர்பில் சிறீதரன் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அரசியல் பரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.