முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் குளத்திற்கு கீழ் சிறுபோக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டுள்ள தனக்கு விதைத்த நாள் தொடக்கம் இன்று வரை நீர் வழங்கப்படாத காரணத்தால் இரண்டு ஏக்கர் வயல் நிலம் அழியும் நிலையில் இருப்பதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.
கமக்கார அமைப்பும் கமநலசேவைகள் திணைக்களமும் தனக்கான சிறுபோக பங்கு நீரினை தர மறுத்து வருவதாகவும் பல தடவைகள் கேட்டும் வேலி அமைத்தால் மாத்திரமே நீர் வழங்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதால் வயல் எரிந்து அழியும் நிலையில் உள்ளது. வேலி அமைக்காத பலருக்கு சிறுபோக நெற்செய்கைக்கு நீர் வழங்கப்படுகின்ற போதும் தனக்கு மாத்திரம் இவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதாகவம் தெரிவித்த அவர் தான் தற்போது வேலி அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார் அத்தோடு உடனடியாக தனது இரணடு ஏக்கர் வயலுக்கு நீர் வழங்கப்படாது விடின் வயல் நிலம் முற்றுமுழுதாக அழிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
எனவே இது தொடர்பில் கமநல சேவைகள் திணைக்கள் அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த விவசாயி தனது வயல் நிலத்திற்கான வேலியினை அமைக்குமாறு கமக்கார அமைப்பு மற்றும் கம விதானை ஆகியோர் கூறியும் அவர் அதனை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே நீர் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்து. இருப்பினும் நாளை சனிக்கிழமை பிற்பகல் அவருக்கு நீர் வழங்குவதற்குரியு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.