9 ஆவது மாடியில் உள்ள குடியிருப்புகள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சேதங்கள் சீரமைக்கப்படும் வரை அந்த குடியிருப்பாளர்கள் குறைந்தது ஒரு வாரமாவது தங்களது வீடுகளுக்கு வெளியே இருக்க நேரிடும் என்றும் டொராண்டோ தீயணைப்புப் படை CP24 ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை ஸ்காபரோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த இரு வயதான பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விக்டோரியா பார்க் (Victoria Park) மற்றும் எக்லிண்டன் (Eglinton) அவென்யூக்களுக்கு அருகிலுள்ள கட்டடம் ஒன்றில் அதிகாலை 2 மணிக்கு சற்று முன்னர் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக டொராண்டோ தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் கடுமையான புகை மூட்டம் காணப்பட்டதுடன், சில குடியிருப்பாளர்கள் தங்களது பால்கனிகளில் (balconies) தஞ்சம் புகுந்திருந்த நிலையில் கண்டறியப்பட்டனர்.
ஒன்பதாவது மாடியின் நடைபாதையில் தீ பரவியிருந்ததுடன், புகை பல குடியிருப்புகளுக்குள்ளும் பரவியது.
குடியிருப்பாளர்கள் இருவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், குடியிருப்பாளர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக டிடிசி (TTC) பேருந்துகள் வரவழைக்கப்பட்டன.
பல குடியிருப்பாளர்களுக்கு டொராண்டோ தீயணைப்புப் படை வீரர்களின் உதவி தேவைப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் தற்போது குடியிருப்பாளர்களின் நலனைக் கண்டறிய வீடு வீடாகச் சென்று பரிசோதித்து வருகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு குடியிருப்பாளர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த போதிலும், அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே கட்டடத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டிலும் ஒரு பாரதூரமான தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.