வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று சனிக்கிழமை (06) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5 ஆம் பிரிவு புதிய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் அச்சமயம் இருந்த தாய், தந்தை, மகள் ஆகியோர் இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களாவர்.
வழமை போன்று தனது பெற்றோர்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை (05) காலை எழும்பவில்லை என சந்தேகமடைந்த மகள் உடனடியாக தனது உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதன் போது குறித்த வீட்டில் இருந்த ஜெனரேட்டரில் இருந்து கசிந்த வாயுவினால் ஏதோ இடம்பெற்றுள்ளதை உணர்ந்த நிலையில் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.
இவ்வனர்த்தத்தில் புதிய வீதியில் வசித்து வந்த 54 வயதுடைய குடும்ப பெண் மரணமடைந்துள்ளார்.
காபன் மொனொக்சைட் காற்றுடன் கலந்து நஞ்சாகியதால் அதை சுவாசித்த நிலையில் குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்து மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.