சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு கொடுத்து வருகிறது திமுக. இதனிடையில் இன்னமும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அழைப்பு வரவில்லை. இந்நிலையில் இதுக்குறித்து பேசியுள்ள திருமாவளவன் எம்பி, விஜய் பற்றியும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் சந்திப்பில் பேசிய விஜய், எப்போதும் போல் திமுக, தவெக இடையில் தான் போட்டி என தெரிவித்தார். அத்துடன் திமுகவை கடுமையாக விமர்சித்தவர், அறிவாலயத்தில் நிழலுக்கு ஒதுங்குபவர்களை எல்லாம் வைத்து கூட்டணியை உருவாக்கி இருப்பதாகவும் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு தவெக தொண்டர்கள் பயர் விட்டு வரும் நிலையில், பிறக்கட்சியை சேர்ந்தவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, தவெக விஜய்யின் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தவர் தவெக விஜய் பற்றி கூறுகையில், அவருக்கு தோணுவதை பேசுகிறார். எழுதி கொடுப்பதை வாசிக்கிறார். திமுக எதிர்ப்பை மட்டுமே அரசியலாக பேசுகிறார். இதுவரைக்கும் ஐந்து தலைவர்களை கொள்கைகளாக ஏற்றுக் கொண்டதாக சொன்ன அவர், அந்த தலைவர்களின் கொள்கை கோட்பாடுகள் என்ன என்பதை தன்னுடைய தலைமையை ஏற்று வருகிற தொண்டர்களிடம் விளக்கியதாக தெரியவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் வந்தால் நாங்கள் என்ன செய்வோம் என்பதை கூட விஜய் சொன்னதாக தெரியவில்லை.
அவர் கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரைக்கும் ஒரே அஜெண்டா மட்டும்தான் விஜய்யின் செயல் திட்டமாக இருக்கிறது. திமுக எதிர்ப்பு. திமுக எதிர்ப்பு மட்டுமே. அது அவருக்கான அரசியல் என்பது மாற்றுக்கருத்து இல்லை. அவர் திமுகவை எதிர்க்கட்டும். ஆனால் விஜய்யின் பார்வை என்ன என்பதை இன்றுவரை நம்மால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எதற்காக கட்சி துவங்கினார்? யாருக்காக கட்சி துவங்கினார்? எந்த இலக்கை நோக்கி அவர் பயணிக்கிறார். எந்த செயல் திட்டத்தை செயல்படுத்த போகிறார்? என திருமாவளவன் கூறியுள்ளார்.