ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளைத் தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 802 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 16 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 794 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், 6 பேர் மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 495 கிராம் ஹெரோயின், 01 கிலோகிராம் 58 கிராம் ஐஸ், 11 கிராம் 200 மில்லிகிராம் கொக்கெய்ன், 02 கிலோகிராம் 710 கிராம் கஞ்சா, 02 கஞ்சா செடிகள், ஒரு கிலோகிராம் 42 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 464 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 395 போதை மாத்திரைகள், ஒரு கிலோகிராம் 85 கிராம் மதனமோதகம் மற்றும் 111 கிராம் மாவா போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.