அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
முதல் நாளில், கோல்கட்டாவில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இரண்டாம் நாளான நேற்று, ஐதராபாத்தில் இருந்து மும்பை வந்தார் மெஸ்ஸி. விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாஜ் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மாலை 4:00 மணியளவில் கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா (சி.சி.ஐ.,) அமைந்துள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடந்த ‘கோட் கப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
உற்சாக வரவேற்பு:மாலை 5:00 மணிக்கு வான்கடே மைதானத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில் இருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக மெஸ்ஸியை வரவேற்றனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
சச்சினுடன் சந்திப்பு: இந்திய கால்பந்து வீரர் சுனில் செத்ரி, முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்ற கண்காட்சி கால்பந்து போட்டி நடந்தது. போட்டியின் முடிவில் இரு அணியினருக்கும் வாழ்த்து தெரிவித்த மெஸ்ஸி, சுனில் செத்ரியை கட்டித்தழுவினார். பின் மைதானத்தை வலம் வந்த மெஸ்ஸி, கேலரியை நோக்கி பந்தை உதைத்து, ரசிகர்களுக்கு பரிசு வழங்கினார். மைதானத்தில் இருந்த இளம் வீராங்கனைகளுடன் கால்பந்து விளையாடினார் மெஸ்ஸி. பின் சச்சின், மெஸ்ஸி, சாரஸ் சந்தித்துக் கொண்டனர். அப்போது சச்சின், தனது ஜெர்சியை மெஸ்ஸிக்கு வழங்கினார்.
‘பேஷன் ஷோ’: இரவு 7:00 மணிக்கு மேல், தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட தனியார் ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியில் மெஸ்ஸி பங்கேற்றார். முடிவில், 2022ல் கத்தாரில் நடந்த ‘பிபா’ உலக கோப்பையில் மெஸ்ஸி பயன்படுத்திய ஜெர்சி உள்ளிட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜாக்கி ஷெராப், ஜான் ஆப்ரஹாம், கரீனா கபூர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.